யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் பவளப்பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை கடற்பகுதியில் அழகிய பவளப்பாறையை இலங்கை கடற்படையின் சுழியோடிகள் கண்பிடித்துள்ளதுடன், அதனை காணொளியாகவும் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்குட்பட்ட கடற்படையைச் சேர்ந்த சுழியோடி குழுவொன்று கடந்த வாரம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போதே குறித்த பவளப்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை நிறைவேற்று பிரிவிற்கு பொறுப்பான கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் கண்காணிப்பின் கீழ் நிறைவேற்று சுழியோடி அதிகாரி மற்றும் சுழியோடி பணிப்பிரிவை சேர்ந்த வீரர்களே காங்கேசன்துறை துறைமுக வளவில் இந்த ஆய்வினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பவளப்பாறை கடற்பரப்பில் 400 மீற்றர் நீளத்தை கொண்டு மிகவும் அழகாக காட்சி தருவதை காணொளியூடாக அவதானிக்க முடிகின்றது.

கடற்வளத்திற்கான பல்வேறு அத்தியாவசியப் பிரிவுகளை இது கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதுடன், இந்த பவளப்பாறையை பாதுகாப்பதற்கு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (நி)
















