கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவது தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவது தொடர்பாக தமிழ் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான விசேட கலந்துரையாடல் கல்முனையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலை தமிழர் மகா சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இக் கூட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள், புத்திஜீவிகள், ஆலயநிர்வாக சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ் தரப்பினரால் வலியுறுத்தப்பட்டது.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தற்போதுள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக தரம் உயர்த்தல், தமிழ் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டு கிராம சேவகர் பிரிவுகளை நீக்குதல், இது தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்வதற்கு சகல தரப்பில் இருந்தும் குழுவொன்றை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
குழு அமைப்பது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது சபையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.
தற்போதைக்கு குழுக்கள் அமைக்க வேண்டாம் பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் தொடர்பில் பல்வேறு குழுக்கள் இயங்கி வருவதாகவும் புதிதாக இன்னுமொரு குழுவினை அமைப்பதை தவிர்க்குமாறு இளைஞர்களினால் வலியுறுத்தப்படது. (நி)