யாழ்ப்பாணம் ஊரெழுவில் ஆலயமொன்றின் மணிக்கூட்டு கோபுரத்தடியில், குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, அப்பகுதியில் காணப்பட்ட குளவிக்கூடு அகற்றப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஊரெழு பகுதியில் ஆலயமொன்றிலிருந்த மணிக்கூட்டு கோபுரத்தில் காணப்பட்ட குளவிக்கூடு கலைந்து குளவி கொட்டியதில், முதியவர் ஒருவர் மரணமான சம்பவத்தை தொடர்ந்து, உயிரிழந்த முதியவரின் உறவினர்கள், குறித்த ஆலய நிர்வாகத்தினருடனும், ஆலயத்தில் நின்றவர்களுடனும் முரண்பட்டு கொண்டனர்.
இதனையடுத்து, நேற்று இரவு 12 மணியளவில், வனவிலங்கு பிரிவினர் குறித்த ஆலய பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த குளவி கூட்டிற்கு நெருப்பு வைத்து அகற்றினர்.
எனினும் குளவிக்கூட்டிற்கு நெருப்பு வைத்து அகற்றும் வேளையில், ஆலயப்பகுதியில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
குளவிக்கூடு அகற்றும் நடவடிக்கையின்போது, தீயணைப்பு படையினரின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த குளவிக்கூடு நேற்றிரவு அகற்றப்பட்டுள்ளது. (நி)