இம்முறை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி வருடாந்த உற்சவத்திற்கு ஆலய தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் பொலீசாரின் சோதனை நடவடிக்கையின் பின்னரே ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என பொலீசாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய குறித்த நடைமுறை பின்பற்றப்பட உள்ளதாகவும் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு முக்கிய வீதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அடியவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஆலயத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் உற்சவ காலங்களில் பறக்கும் கமராக்கள் பாவனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பறக்கும் கமராக்கள் பாவிக்கப்படுமாயின் அவை சுட்டு விழுத்தப்படும் எனவும் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.
இன்று யாழ்ப்பாண மாநகரசபையில் எதிர்வரும் 6 ம் திகதி ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய உற்சவம் தொடர்பான முன்னாயத்த கூட்டத்தின் போது மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.







