ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களில் பொது மக்கள் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகளின் நிலைகளை குறிவைத்து நேற்று நள்ளிரவில் அரசபடைகள் வான்தாக்குதல் நடத்தியபோது, பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்கள் உட்பட பொது மக்கள் 35 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் பலர் படுகாயமடைந்தனர்.

காந்தஹார் மாகாணத்தில் உள்ள காக்ரெஸ் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தீவிரவாதிகள் நடாத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதேவேளை, பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியோரம் பயங்கரவாதிகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டில் சிக்கியதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தமைக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

தலீபான் தீவிரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வரும் அதேவேளை, ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (நி)

Previous articleமலையக தன்னெழுச்சி இளைஞர்களின் மரம் நடும் நிகழ்வு (photo)
Next articleமலையகத்தில் தபால் சேவையில் பாதிப்பில்லை! (படங்கள் இணைப்பு)