மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடி தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, இலங்கை மத்திய வாங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம், அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.


அந்த வகையில் ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி பிடியாணை பிறப்பிப்பது குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், தனது மருமகனுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றுக்கு, சட்டவிரோதமான முறையில் திறைசேரி பத்திரங்களை அனுப்பியதாக அர்ஜுன் மகேந்திரன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதனால், 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பத்திர ஏலங்களின் போது குறைவான வட்டி விகிதத்தில் பெற விருப்பம் தெரிவித்த முதலீட்டாளர்களைத் தவிர்த்து விநியோகிக்கப்பட்டதன் விளைவாக, ஒட்டு மொத்தமாக அரசாங்கத்திற்கு சுமார் 1.6 பில்லியன் ரூபாவுக்கும் மேலதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து, அன்றைய தினத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மகேந்திரன், குறித்த மோசடி தொடர்பான கோப் குழுவின் அறிக்கை, பாராளுமன்றில் சமர்பிக்கப்படுவதற்கு முதல்நாள், அதாவது 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.

அந்தவகையில், சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள அர்ஜூன மகேந்திரனை ஒப்படைப்பது குறித்து, சிங்கப்பூர் பிரதமரிடம் தனிப்பட்ட முறையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் இரண்டாவது முறையாக கலந்துரையாடி இருந்தமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleமட்டு, காத்தான்குடியில் மீன் திருடர்கள் கைது
Next articleவடக்கு ஆளுநரை சந்தித்த ஐ.நா விசேட பிரதிநிதி!