ஹாங்கொங்கில் ஜனநாயக ஆதரவாளர்கள் மீது சீன ஆதரவு வன்முறைக் கும்பல் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஹாங்கொங் அரசுக்கு எதிராக கடந்த 7 வாரங்களுக்கும் மேல் மக்கள் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அந்த நகரின் யுவென் லாங் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள் மீது வெள்ளை சட்டை அணிந்து வந்த ஒரு கும்பல் பிரம்பு, இரும்புத் தடிகளைக் கொண்டு கடந்த வாரம் கடுமையாகத் தாக்கியது. அதில் 45 பேர் காயமடைந்தனர்.

சீனாவுக்கு ஆதரவாக அந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் மீது பொலிஸார் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், வன்முறைக் கும்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்கொங்கில் ஏராளமானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த நகர அரசு போராட்டங்கள் நடத்துவதற்குத் தடை விதித்திருந்த நிலையிலும், தடையை மீறி அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. (நி)

 

Previous articleபிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்:08பேர் உயிரிழப்பு!
Next articleருகுணு பல்கலைகழகத்தின் இரு பீடங்கள் நாளை ஆரம்பம்!