மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை பிற்பகுதி மற்றும் நேற்று பலமான சூறாவளி தாக்கியதில் 100க்கு மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
பெருமளவு கட்டங்கள் இடிந்து விழுந்ததில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கென்டக்கியில் மட்டும் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அம்மாகாண ஆளுநர் அண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.
சூறாவளி காரணமாக கென்டக்கியில் ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலை, மேற்கு இல்லினாய்ஸில் ஒரு அமேசான் கட்டடம் மற்றும் ஆர்கன்சாஸில் உள்ள ஒரு முதியோர் இல்லம் ஆகியவை இடிந்து விழுந்தன.
மிசோரி, டென்னசி மற்றும் மிசிசிப்பி உட்பட குறைந்தது ஆறு மாகாணங்களில் சூறாவளி பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்டக்கியில் மட்டும் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை 100 -ஐ தாண்டும் எனக் கணிக்கப்படுகிறது என மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு கென்டக்கி நகரமான மேபீல்ட் சூறாவளியால் மிக மோசமான அழிவுகளைச் சந்தித்துள்ளது. அங்குள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலையில் நேற்று முன்தினம் இரவு 110 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது சூறாவளி காரணமாக கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். கட்டத்துக்குள் இருந்து 40 பேர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்கன்சாஸில் இரண்டு பேர், டென்னசியில் நான்கு பேர் இல்லினாய்ஸில் ஆறு பேர் மற்றும் மிசோரியில் இரண்டு பேர் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கென்டக்கி மாகாணத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக மாகாண அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்துக்கு அவசர கால மீட்புப் பணியாளர்கள், தீயணைப்புப் படையிர் அனுப்பப்பட்டு மீட்புப் பணிகள் விரைவாக இடம்பெற்று வருகின்றன.
இடிபாடுகளில் இருந்து தொடர்ச்சியாக சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சூறாவளி: 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
